அந்திய காலம் அமைதியான காலமா?
கடமைகள் முடித்துக் கால்நீட்டி சுகமாகக்
காலம் களிக்கும் வாழ்க்கை
முதுமை
வாழ்க்கை என்ற ஒரு நோக்கம்.
ஆகையால், முதுமை என்னும் அந்திய
வாழ்க்கை அமைதியான
வாழ்க்கை என்று பலருக்கு ஒரு
எண்ணம்.
ஆனால், இதோ!
* காசு இல்லாது கஞ்சிக்குத்
தவிக்கும் முதியோர் பலர்.
* காசு இருந்தும் காவலுக்கு
எவரும் இல்லாது தவிக்கும் சிலர்.
* கூட்டுக்குடும்பமாக
வாழ்ந்தாலும் கூழுக்கு எதிர்பார்த்து
வாழ்பவர்களும் சிலர் உண்டு.
* பல் இல்லாத பொக்கை வாயில்
பொரிதின்று காலம்
கடத்துபவர்கள் உண்டு.
* பழைய நினைவுகளில் புதைந்து
வெறும் வாயை மெல்லும் சிலர் உண்டு.
* எதிர்காலத்தில்
எதிர்பார்ப்பது எதை?
எதிர்ப்பது எப்படி என்று எண்ணி ஏங்கும் பலர்
உண்டு.
* பெற்றெடுத்துப் பேணிய மக்கள்
இருப்பினும், மேல் நாட்டுக்கு
அவர்கள் சென்று துணையின்றித் தவிக்கும் சிலர்,
மலடியே
மேல் என்று நொந்து கொள்பவரும் உண்டு.
* தரையில் நடக்க தள்ளாடும் சிலர்.
* இருமலில் இருட்டு அறையில்
படுத்து இரவெல்லாம்
உறக்கமின்றி இறுதி நாட்கள் நோக்கிக் கிடப்பவர்கள்
சிலர்.
* கண்புரையும் திரையும்
விழுந்து, கண் இருந்தும்
குருடனாகக் காலம் கடத்துவர் சிலர்.
* நினைவு இழந்து நிலை தெரியாது
நிற்பவர் சிலர்.
* மூட்டுவலியால் முடங்கி
கிடக்கும் முதியவர் சிலர்.
* இடுப்பு வலியில் இருக்கையில்
இருக்க
இயலாமையால் வருந்துபவர்கள் உண்டு.
* பிள்ளைகளின் கல்லூரி செலவும்
கல்யாண செலவும் போக
கையிருப்பைக்
கைப்பிடித்தவளின் காசநோய்க்குச் செலவழித்து,
காசு
இல்லாமல் கஞ்சிக்குத் திண்டாடுபவர்களும் உண்டு.
* நாலு பிள்ளைகள் இருப்பினும்
நாலு மாதத்திற்கு ஒரு இடம்
மாற்றி, சதுரங்க காய்களாக வாழ்க்கை நடத்தும்
முதியவர்களும் உண்டு.
* உண்ட உணவும் உடுத்திய ஆடையும்
உணர முடியாது இருக்கும் சிலர்.
* காசோலைக்குக் கையெழுத்து
இடக்கூட
கைநடுங்குவது பலருக்கும் உண்டு.
* "நாகாக்க, காவாக்கால், சோகாப்பர்
சொல் இழுக்குப்பட்டு"
என்ற குரலுக்கேற்ப, சுவை - சொல் இரண்டும் கட்டுப்படாது
இகழ்ச்சி படுபவர்களும் உண்டு.
* இளைய சொந்தபந்தங்கள்
தன்பின்னே பிறப்பினும்
தன் கண்முன்னே இறப்பதைக் கண்டு
கண்ணீர் விடுபவர்கள் சிலர் உண்டு.
* செயலற்ற செவி பயனற்ற உடல்
இருந்து படுக்கையில்
படுத்தும் பசி, பற்று, பாசம் சிலருக்கு உண்டு.
* மல ஜலம், கழிவு தன் வசம் இல்லாது,
மாற்று ஆடை உடுத்த மற்றவர்களின் உதவி
எதிர்பார்த்து,
தன் ஊழ்வினையின் பயனை உணர்ந்து,
நொந்துகொள்பவர்களும் பலர்.
* சர்க்கரை நோய் முற்றி ரத்தம்
சுத்தம் செய்ய
ஆஸ்பத்திரி தினம் விஜயம் செய்பவர்களும் உண்டு.
* மூன்று பிள்ளைகளை பெற்று
எடுத்து, பேணி
வளர்த்தவர் முதியோர் இல்லத்தில் இப்போது
வாழ்க்கை வாழ்பவர்களும் உண்டு.
* முப்பது பவுன் விற்று
மகளுக்கு மருத்துவப்படிப்பு படிக்க
வைத்தவள், இப்போது மூச்சுமுட்டு வியாதியால்
முனகிப்படுத்திருப்பவர் பலர் உண்டு.
முடிவில்,
எல்லாவற்றிற்கும் மேலாக
தனிமையில் வாழும்
பட்டுபோன தனி மரம் அவன்/அவள்.
அந்திய வாழ்க்கை அமைதியான
வாழ்க்கையா?
நீங்களே சொல்லுங்கள்!
பீமாச்சார்
Comments
Post a Comment