குரங்கு மனம்
திருநீர் அணி,
திருநாமம் தரி என்பர்.
சிவப்பு ஆடை அணி, கருப்பு ஆடை தரி என்பர்.
காவி உடுத்தி காவடி எடு என்பர்.
விதியை வெல்ல பலவழிகள் சொல்வர்.
வட கங்கை சென்று வாரணாசியில் குளி
வரன் கிட்டும் என்பர்.
ஆறுபடை வீடு சென்று ஆறுமுகத்தானை
ஆராதனை செய் என்பர்.
நூறு மணி கொண்டு நூறு எட்டு ஜபம்
நூத்திஎட்டு நாட்கள் செய்திடு என்பர்.
ஐந்து உலோகம் கொண்ட ஐந்து முக
ஆஞ்சநேயர் காசை அங்கத்தில் அணி என்பர்.
ஏழுமுக உதிரட்சையை ஏழு ரத்தினங்கள் கொண்ட
மாலையை ஏகமனிதாக தரி என்பர்.
மடாதிபதிகள் மந்தரித்துக் கொடுத்த
மாத்திரைகளை முப்பது நாட்கள் முழுங்கு என்பர்.
வீதி வித்தைக்காரன் வியாதி, வசீகரம், வரன்,
வறுமை, வறட்சி எல்லாவற்றிற்கும் ஏக
தாயத்து கையில் அணி என்பர்.
சித்தயோகம், சிவயோகம், ஆத்மயோகம், மானசயோகம்
பரமாத்மயோகம், புராதன யோகம் என்ற பலயோக
விதிகளைப் பின்பற்று என்பர்.
நித்தியானந்தம், பரமானந்தம், ஆத்மானந்தம், அத்புதானந்தம்
க்ரியானந்தம் என்ற ஆனந்தமடங்களுக்குச் சென்றால்,
ஆனந்தம் கைகூடும் என்பர்.
கடைசியாக இவையெல்லாம் கண்டும் கேட்டும் இந்த மனம்
கிளைவிட்டு கிளைதாவும் "குரங்கு மனமாக"
மாறுவதில் என்ன ஆச்சரியம்!
பீமாச்சார்
Comments
Post a Comment